விக்கெட்டுகள் எடுக்காமல் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதால் மட்டும் மிட்செல் ஸ்டார்க் மோசமான பந்துவீச்சாளர் என கூறிவிட முடியாது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஓவரில் அதிக ரன்களும் விட்டுக் கொடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விக்கெட்டுகள் எடுக்காமல் அதிக ரன்கள் விட்டுக் கொடுப்பதால் மட்டும் மிட்செல் ஸ்டார்க் மோசமான பந்துவீச்சாளர் என கூறிவிட முடியாது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் மோசமாக இருப்பது பெரிய விஷயம் இல்லை. டி20 போட்டிகள் என்றாலே பந்துவீச்சாளர்களின் பந்துகள் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்படும். 4 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு என்பது முக்கியம். தனிநபரின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பெரிதாக மகிழ்ச்சி அடையாமல் இருப்பதற்கு காரணம், வீரர்களுக்கு போட்டி நடைபெறும் நாள் நன்றாகவும் அமையலாம், மோசமாகவும் அமையலாம். போட்டியின் முடிவில் அணி வெற்றி பெற வேண்டும். மிட்செல் ஸ்டார்க் எந்த அளவுக்கு ஆபத்தான பந்துவீச்சாளர் என்பது எங்களுக்குத் தெரியும். 4 போட்டிகள் அவரை மோசமான பந்துவீச்சாளராக மாற்றி விடாது. அவர் இனிவரும் ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார்.
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.