ரிக்கி பாண்டிங்கின் அறிவுரை அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியதாக தில்லி அணியின் இளம் வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய தில்லி அணியின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் அதிரடியாக அரைசதம் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த நிலையில், ரிக்கி பாண்டிங்கின் அறிவுரை அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாட உதவியதாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால், நான் களமிறங்குவதற்கு முன்பு ரிக்கி பாண்டிங் என்னிடம் பேசினார். பந்தினை கடினமாக அடிக்க முயற்சி செய்யாமல் டைமிங் செய்து விளையாட அறிவுரை கூறினார். அவரது அந்த அறிவுரை அதிரடியாக ஆட வேண்டும் என்ற எனது எண்ணத்தை குறைத்து, பந்தை சரியாகப் பார்த்து நடுபேட்டில் படும்படியாக விளையாட வேண்டும் என்பதை உணர்த்தியது. அவர் கூறிய அறிவுரையின்படி விளையாடியது சிறப்பான இன்னிங்ஸாக அமைந்தது என்றார்.
நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 35 பந்துகளில் 55 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்தது குறிப்பிடத்தக்கது.