கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் தன் மீது வைத்த நம்பிக்கையால் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட முடிந்ததாக ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இருப்பினும், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னௌ அணி சிறப்பான ஸ்கோரை எட்டுவதற்கு ஆயுஷ் பதோனியின் அதிரடியான அரைசதம் உதவியாக இருந்தது.
இந்த நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டிங் லாங்கர் தன் மீது வைத்த நம்பிக்கையால் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாட முடிந்ததாக ஆயுஷ் பதோனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், வலைப்பயிற்சியின்போது நன்றாக விளையாடினேன். இருப்பினும், எனக்கு அணியில் விளையாட வாய்ப்பளித்த கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கேன்.பேட்டிங் செய்தபோது ஆட்டத்தை கடைசி ஓவர் வரை எடுத்துச் சென்று அதன்பின் அதிரடியாக விளையாட வேண்டும் என எண்ணினேன். ஏனெனில், 20 ஓவர் வரை களத்தில் இருந்தால் மட்டுமே 150-க்கும் அதிகமாக ரன்கள் குவிக்க முடியும். நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். வலைப்பயிற்சியின்போது நன்றாக செயல்பட்டதால் என்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் உதவி செய்தனர் என்றார்.
நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் பதோனி 35 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.