மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களமிறங்கினர். ரஹானே 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து, கேப்டன் ருதுராஜ் மற்றும் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் இறுதி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ்.தோனி ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை தரப்பில் கேப்டன் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜெரால்டு கோட்ஸீ மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.