ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகவும் சுமாராக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது.
ஹார்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அவர் எடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையை வீழ்த்தியது.
இந்த நிலையில், மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி மிகவும் சுமாராக இருப்பதாக சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மிகவும் சுமாரான பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே நன்றாக விளையாடியபோதிலும், சென்னை சூப்பர் கிங்ஸை குறைந்த ரன்களுக்குள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸை 185 அல்லது 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஹார்திக் பாண்டியா மிகவும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸர் கொடுத்தால் பரவாயில்லை. ஆனால், மூன்று சிக்ஸர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார்.
நேற்றையப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஹார்திக் பாண்டியா 43 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.