அணியின் தோல்விக்கு தனியொருவரை குறை கூறுவது சரியல்ல என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது.
ஹார்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். அவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். அவர் எடுத்த 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையை வீழ்த்தியது.
இந்த நிலையில், அணியின் தோல்விக்கு தனியொருவரை குறை கூறுவது சரியல்ல என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: உங்களுடைய வாழ்விலும் இதுபோன்ற நாள்கள் வரும். அணியின் தோல்விக்கு தனிநபர் ஒருவரை குறைகூறுவதைக் கேட்டு அலுத்துவிட்டது. கிரிக்கெட் என்பது ஒரு அணியாக இணைந்து விளையாடும் விளையாட்டு. அதில் தனிநபரை குறைகூறுவது சரியாகாது. பாண்டியா அதிகம் தன்னம்பிக்கை உடையவர். கிரிக்கெட்டில் உங்களுக்கு சிறப்பான நாள்களும் இருக்கும், மோசமான நாள்களும் இருக்கும் என்றார்.
நேற்றையப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஹார்திக் பாண்டியா 43 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.