ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான சஹா 5 ரன்களிலும், ஷுப்மன் கில் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடி வருகிறது.