துஷார் தேஷ்பாண்டேவின் சிறப்பான பந்துவீச்சு சிஎஸ்கேவின் வெற்றிக்கு உதவியதாக அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிஎஸ்கே பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே பவர் பிளேவில் சன் ரைசர்ஸின் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பவர் பிளே முடிவதற்குள் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா மற்றும் அன்மோல்பிரீத் சிங் ஆகியோரின் விக்கெட்டினைக் கைப்பற்றி அசத்தினார் துஷார் தேஷ்பாண்டே.
இந்த நிலையில், பவர் பிளேவில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிஎஸ்கேவின் வெற்றிக்கு உதவியதாக துஷார் தேஷ்பாண்டேவுக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: சில போட்டிகளில் நாங்கள் ஆட்டத்தின் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்காமல் இருந்தது எங்களுக்கு போட்டியை வெல்வதை கடினமாக்கியது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் மட்டுமே எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். துஷார் தேஷ்பாண்டே மிகவும் சிறப்பாக பந்துவீசினார். அவரது கடின உழைப்பு அவருக்கு பலனளித்துள்ளது. ஜடேஜாவும் சிறப்பாக பந்து வீசினார் என்றார்.
நேற்றையப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய துஷார் தேஷ்பாண்டே 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.