ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனை எம்.எஸ்.தோனி உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக மகேந்திர சிங் தோனி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியான தோல்விகளின் காரணத்தினால் தொடரின் பாதியில் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகினார். தோனி மீண்டும் அணியின் கேப்டனாக மாறினார். அதன்பின், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
42 வயதாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டனை எம்.எஸ்.தோனி உருவாக்க வாய்ப்புள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரின் இம்பாக்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்தி ஆட்டத்தின் பாதியில் எம்.எஸ்.தோனி அணியின் புதிய கேப்டனாக யாரேனும் ஒருவரை முன்னிறுத்த வாய்ப்புள்ளது. அதனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படுவதற்கான ஆண்டாக இருக்கலாம். அவர் மேலும் ஒரு சில ஆண்டுகள் விளையாட விரும்பினால், அணியின் கேப்டனாக தோனியே தொடர்வார். அவரை சென்னை அணியின் கேப்டனாக மேலும் சில ஆண்டுகளுக்குப் பார்க்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம் என்றார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வருகிற மார்ச் 22 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.