ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தின் திருப்புமுனை குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.
17-வது ஐபிஎல் சீசன் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அணியை வழிநடத்தினார். இப்போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பை வெற்றியுடன் தொடங்கியுள்ளார் கெய்க்வாட்.
இந்த நிலையில், டு பிளெஸ்ஸி மற்றும் மேக்ஸ்வெல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்ததாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: போட்டியின் ஆரம்பத்திலிருந்து ஆட்டம் எங்களது கட்டுப்பாட்டில் இருந்தது. 2-3 ஓவர்களில் ரன்கள் அதிகமாக விட்டுக் கொடுத்தோம். ஆனால், முஸ்தஃபிசூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசத் தொடங்கிய பிறகு, நாங்கள் மீண்டும் ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தோம். டு பிளெஸ்ஸி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரின் விக்கெட்டினையும் அடுத்தடுத்து கைப்பற்றியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அடுத்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.