சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ், முஸ்தஃபிசூர் ரஹ்மானை பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். பெங்களூரு அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ஃபாப் டு பிளெஸ்ஸி மற்றும் ரஜத் படிதார் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
இந்த நிலையில், சிஎஸ்கே-வின் திட்டத்தை முஸ்தஃபிசூர் ரஹ்மான் அழகாக செயல்படுத்தியதாக அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சைமன்ஸ் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக எரிக் சைமன்ஸ் பேசியதாவது: நாங்கள் எப்போதும் ஆடுகளத்தின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதையும், அதற்கேற்றவாறு அணி சம பலத்துடன் உள்ளதா என்பதையும் குறித்து யோசிப்போம். சென்னை ஆடுகளத்தின் தன்மைக்கு முஸ்தஃபிசூரின் பந்துவீச்சு சரியாக இருக்கும் என நினைத்தோம். எங்களது திட்டத்தை அவர் மிக அழகாக செயல்படுத்தினார் என்றார்.
நேற்றையப் போட்டியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.