குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சாதுரியமான முடிவுகளை எடுக்க கற்றுக் கொள்வார் என அந்த அணியின் ஆலோசகர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் அடைந்துள்ளது. கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் சாதுரியமான முடிவுகளை எடுக்க கற்றுக் கொள்வார் என அந்த அணியின் ஆலோசகர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 போட்டி மிகவும் வேகமானது. நீங்கள் தொடர்ச்சியாக சாதுரியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். டி20 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் போன்றது கிடையாது. டெஸ்ட் போட்டியில் முடிவெடுப்பதற்கு அதிகம் நேரம் இருக்கும். ஷுப்மன் கில் சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். அவர் கேப்டன் பதவியை சரிவர செய்கிறார் என நினைக்கிறேன். அவரிடம் சிறந்த தலைவனுக்கான குணங்கள் உள்ளன. இளம் கேப்டனான அவர் கற்றுக் கொள்ள வேண்டியதற்கு நிறைய இருக்கிறது. குறிப்பாக, டி20 போட்டிகளில் கற்றுக் கொள்ள வேண்டியதற்கு நிறைய இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் அதனை கற்றுக் கொள்வார் என்றார்.
அகமதாபாதில் நாளை (மார்ச் 31) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.