பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட பாபர் அசாமை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பாபர் அசாம் தனது முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் பாபர் அசாமுக்குப் பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாபர் அசாம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனில், சில நிபந்தனைகள் உள்ளன. அணியின் பயிற்சியாளரை நியமிக்கும்போது தனது கருத்தும் கேட்கப்பட வேண்டும். அதேபோல அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தன்னை கேப்டனாக நியமிக்க வேண்டும் என பாபர் அசாம் நிபந்தனைகள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த சில மாதங்களாகவே தங்கள் அணிக்கான தலைமைப் பயிற்சியாளருக்கான தேடலில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேடலில் வெளிநாட்டு பயிற்சியாளர்களான ஆடம் வோஜஸ், லூக் ராஞ்சி, ஷேன் வாட்சன் மற்றும் மைக் ஹெசன் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அணுகியதும், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க அவர்கள் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு கேரி கிறிஸ்டனை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.