லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் பொதுவெளியில் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட அந்த அணியின் உரிமையார் சஞ்ஜிவ் கோயங்காவை இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயங்கா கேமரா முன்னிலையில் கடுமையாக கண்டிக்கும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. லக்னௌ அணியின் உரியமையாளரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், லக்னௌ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலிடம் பொதுவெளியில் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட அந்த அணியின் உரிமையார் சஞ்ஜிவ் கோயங்காவை இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கோடிக்கணக்கான மக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் கேமரா முன்பு நடைபெறுகிறது. அந்த விடியோவினைப் பாருங்கள். அது வெட்ககரமானது. உங்களுடைய பேச்சுக்கு எல்லை இருந்திருக்க வேண்டும். பேசுவதற்கும் முறையிருக்கிறது. இந்த சம்பவம் தவறான உதாரணமாக உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை இருக்கிறது என்பதை முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டும். நீங்களும் (சஞ்ஜிங் கோயங்கா) அணியின் உரிமையாளராக மதிக்கத்தக்க நபர். உடனடியாக உங்களது அணி வீரர்களிடத்தில் கடுமையாக பேச வேண்டிய அவசியமில்லை. அப்படி பேச வேண்டுமானால், அதற்கு பல வழிகள் இருக்கின்றன.
நீங்கள் இந்த விஷயத்தை வீரர்களின் உடைமாற்றும் அறையில் செய்திருக்கலாம் அல்லது ஹோட்டலில் அவர்களிடம் பேசியிருக்கலாம். மைதானத்தில் கேமராவிற்கு முன்பு இவ்வாறு நடந்து கொண்டது அவசியமற்றது. நீங்கள் செய்த காரியத்தால் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடியேற்றப் போவதில்லை. கே.எல்.ராகுல் அணியின் கேப்டன். அவர் சாதாரண வீரர் அல்ல. கிரிக்கெட் அணியாக விளையாடும் விளையாட்டு. ஆட்டத்தின் முடிவு சாதகமாக வரவில்லை என்பது பெரிய விஷயம் கிடையாது. ஆட்டத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். போட்டியில் நல்ல நாள்களும் வரும், கெட்ட நாள்களும் வரும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் மரியாதை இருக்கிறது. பேசுவதற்கும் முறை இருக்கிறது என்றார்.
கே.எல்.ராகுல் மற்றும் லக்னௌ அணியின் உரிமையாளர் விவகாரத்தில், அந்த அணியின் உரிமையாளரை விமர்சித்து கே.எல்.ராகுலுக்கு ஆதரவாகப் பேசிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி என்பது குறிப்பிடத்தக்கது.