![விராட் கோலி](http://media.assettype.com/dinamani%2F2024-05%2F0f25fcfd-d5d2-420e-a8e1-c8b34b67c92c%2Fvirat.jpg?rect=0%2C45%2C1232%2C693&w=480&auto=format%2Ccompress&fit=max)
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி அந்த அணியின் வீரர்களிடத்தில் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூருவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் குவாலிஃபையர் 2 போட்டிக்குத் தகுதி பெற்றது. இதனால், ஆர்சிபியின் கோப்பையை வெல்லும் கனவு தகர்ந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி அந்த அணியின் வீரர்களிடத்தில் பேசியுள்ளார்.
பெங்களூரு வீரர்களிடத்தில் அவர் பேசியதாவது: நாம் நமது சுயமரியாதைக்காக விளையாடினோம். அதனால், நமக்கு நம்பிக்கை கிடைத்தது. தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து நாம் பிளே ஆஃப் போட்டிக்கு முன்னேறிய விதம் மிகவும் சிறப்பானது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது உண்மையில் சிறப்பான தருணம். என் வாழ்நாளில் அந்த தருணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால், அந்த வெற்றியில் அணியில் உள்ள ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளோம். அதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.
ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியடைந்த ஆர்சிபி, கடைசி 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.