ஓய்வு முடிவை திரும்பப் பெற்று சுனில் நரைன் டி20 உலகக் கோப்பையில் விளையாடினால் ஒட்டுமொத்த மேற்கிந்தியத் தீவுகளும் மகிழ்ச்சியடையுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் சுனில் நரைன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் கடைசியாக டி20 போட்டியில் விளையாடியிருந்தார். அதன்பின் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலுமே சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் இதுவரை சுனில் நரைன் 482 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் அவரது பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஓய்வு முடிவை திரும்பப் பெற்று சுனில் நரைன் டி20 உலகக் கோப்பையில் விளையாடினால் ஒட்டுமொத்த மேற்கிந்தியத் தீவுகளும் மகிழ்ச்சியடையுமென மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூற வேண்டுமென்றால், நடப்பு ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் விளையாடுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. 500 ரன்களை ஒருவர் நெருங்குவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு சுனில் நரைனிடம் பேசினோம்.
இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக நீங்கள் உங்களது ஓய்வு முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். இந்த உலகக் கோப்பை முடிவடைந்த பிறகு, நீங்கள் ஓய்வை அறிவித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை செய்யுங்கள் என்றோம். இருந்தும், அவர் ஓய்வு முடிவைத் திரும்பப் பெறுவதாக இல்லை. அவர் முடிவு செய்துவிட்டார். அவரது முடிவை நான் மதிக்கிறேன். அவரது ஓய்வு முடிவை இந்த ஒரு முறை மாற்றிக் கொள்ள முடிந்தால், ஒட்டுமொத்த மேற்கிந்தியத் தீவுகளும் மகிழ்ச்சியடையும் என்றார்.