
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 7 ரன்களில் இருக்கும்போது பசல்ஹக் பரூக்கி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது.
15 நொடிகள் நேரத்துக்குப் பிறகு ரோஹித் சர்மா டிஆர்எஸ் ரிவிவ் எடுத்ததால் அதை நடுவர் ஏற்றுக்கொண்டு மூன்றாம் நடுவரிடம் சென்றார்.
பிறகு ரோஹித் சர்மாவுக்கு நாட் அவுட் என தீர்ப்பு கிடைத்தது. பிறகு ரோஹித் சர்மா 53 ரன்களை குவித்தார். இது போட்டியில் முக்கியமானதாக மாறியது.
இது குறித்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் காலதாமதமானப் பிறகு எப்படி நடுவர் ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த சீசனில் ஒருமுறை பந்துவீச்சாளர் (தீபக் சஹார்) விக்கெட் கேட்காதபோதே நடுவர் கையை உயர்த்தியது சர்ச்சையானது.
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மீது பொதுவாகவே நடுவர்கள் சாதகமாக இருப்பதாகப் பலமுறை குற்றச்சாட்டுகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.