
போர்ப் பதற்றம் எதிரொலியால் பஞ்சாப் - மும்பை போட்டி அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல் மேலும் தீவிரமடைந்திருக்கிறது.
இதனால், இந்தியாவில் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஹிமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ள விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 11) அங்கு நடைபெற வேண்டிய பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளது. இதனை குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் அனில் பட்டேல் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அனில் பட்டேல் கூறுகையில், “பிசிசிஐ எங்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நாங்கள் அதை உறுதி செய்துள்ளோம். இந்தப் போட்டி மதியம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
தர்மசாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் - தில்லி ஆட்டத்தில் விளையாடும் வீரர்கள் எவ்வாறு குஜராத் வருவார்கள் என்று தெரியவில்லை. சண்டீகர் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அதேவேளையில் சாலை வழியாக தில்லிக்குச் சென்றால் 10 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். இது பிசிசிஐ சவாலாகவே இருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையுமா?