11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளின் 35-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. புணேவில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பார்திவ் படேல் 53, டிம் சௌத்தி 36* ரன்கள் சேர்த்தனர்.
கடந்த ஆட்டத்தில் தோல்விக்கு முக்கியப் பங்கு வகித்த சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா, இம்முறை சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விராட் கோலி உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து. அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், தோனி 3 இமாலய சிக்ஸர்களும், 1 பவுண்டரியுடன் 31* ரன்கள் எடுத்தனர்.