தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா, சிக்ஸருடன் இரட்டைச்சதம் விளாசினார்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. மயங்க் அகர்வால் 10, புஜாரா 0 மற்றும் விராட் கோலி 12 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், துணைக் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுடன் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடி, முன்னாள் அதிரடி வீரர் சேவாக் போன்று சிக்ஸருடன் சதம் விளாசினார். இது நடப்பு தொடரில் 3-ஆவது மற்றும் சர்வதேச டெஸ்டில் 6-ஆவது சதமாகும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதும் சிக்ஸருடன் இரட்டைச்சதம் விளாசிய ரோஹித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மொத்தம் 255 பந்துகளில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இது சர்வதேச அரங்கில் அவரது முதல் இரட்டைச் சதமாகும்.
இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 500-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய துவக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.
அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் குவித்து சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 11-ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.