பிறந்த நாள்: சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழ்ப்பெண் மிதாலி ராஜ்

தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை...
பிறந்த நாள்: சர்வதேச அரங்கில் சாதித்து வரும் தமிழ்ப்பெண் மிதாலி ராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22-வது வருடத்தை முடித்துள்ளார். இவ்வளவு காலம் வேறு எந்த வீரர்/வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும்.

1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 22 வருடங்கள் ஓடிவிட்டன. 

ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிவர்கள்:

22 வருடங்கள் 161 நாள்கள்* - மிதாலி ராஜ்
22 வருடங்கள் 91 நாள்கள் - சச்சின் டெண்டுல்கர்
21 வருடங்கள் 184 நாள்கள் - ஜெயசூர்யா

(சச்சின், மிதாலி ஆகிய இருவரும் ஒரே வயதில், 16 வருடங்கள், 205 நாள்கள், இந்திய அணிக்கு அறிமுகமானார்கள்.)

இன்று தனது 39-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் மிதாலி ராஜ். 

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். 

வியத்தகு சாதனைகள்

ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 

1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய ஒரே வீராங்கனை.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் மிதாலி ராஜ் தான். 7391 ரன்கள். அடுத்த இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற சார்லோட்டே எட்வர்ட்ஸ் 5992 ரன்களே எடுத்துள்ளார். 

இந்திய அணிக்காக 11 டெஸ்ட், 220 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் 39 வயது மிதாலி ராஜ் விளையாடியுள்ளார். டெஸ்டில் 1 சதத்துடன் 699 ரன்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களுடன் 7391 ரன்களும் டி20யில் 2364 ரன்களும் எடுத்துள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் (16 வருடங்கள், 205 நாள்கள்) சதமடித்த வீராங்கனை என்கிற பெருமையும் மிதாலி ராஜிடமே உண்டு. மேலும் மகளிர் டெஸ்டில் இரட்டைச் சதமெடுத்த 7 வீராங்கனைகளில் மிதாலி ராஜும் ஒருவர். இதுவரை அவரைத் தவிர வேறு எந்த இந்திய வீராங்கனையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் எடுத்ததில்லை. 

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார்.  

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர் என்கிற பெருமையைக் கொண்டுள்ள மிதாலி ராஜ், சமீபத்தில் 20,000 ரன்கள் என்கிற இலக்கையும் அடைந்தார். 

2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.

வாழ்க்கை வரலாற்றுப் படம்

2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. 

மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ்.  சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா திடீரென விலகினார்.  அவருக்குப் பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கி வருகிறார். 

மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சபாஷ் மித்து, 2022 பிப்ரவரி 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு

2006-ல் இந்திய மகளிர் அணி விளையாடிய முதல் டி20 ஆட்டத்தின் கேப்டனாகச் செயல்பட்டவர் மிதாலி ராஜ். மூன்று டி20 உலகக் கோப்பை உள்பட 32 டி20 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார்.  2019 செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்தார். 32 டி20 ஆட்டங்களிலும் மூன்று டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி வென்றதற்கு சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த மிதாலி ராஜ், என் வாழ்க்கையில் வியந்து பார்த்த ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது மகிழ்ச்சி. நன்றி சாம்பியன் என ஆங்கிலத்தில் ட்வீட் செய்தார். இதற்கு எதிர்வினையாற்றிய ரசிகர் ஒருவர், மிதாலிக்குத் தமிழ் தெரியாது, அவர் ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பேசுவார் என்றார்.

இதனால் கடுப்பான மிதாலி தனது அடுத்த ட்வீட்டை தமிழிலேயே வெளியிட்டார். தமிழ் என் தாய் மொழி... நான் தமிழ் நன்றாக பேசுவேன்... தமிழனாக வாழ்வது எனக்குப் பெருமை என்று தமிழில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் அவர் கூறியதாவது: ஆனால், அதைவிடவும் பெருமைக்குரிய இந்தியன் நான். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் விமர்சிக்கும் ரசிகரே, நான் தினமும் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுறுத்துவதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என்றார்

லட்சியம் ஒருநாள் உலகக் கோப்பை

இந்திய ஒருநாள் கேப்டனாக தற்போது உள்ள மிதாலி ராஜ், நியூசிலாந்தில் அடுத்த வருடம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளார். இதுவே தன்னுடைய கடைசி உலகக் கோப்பைப் போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சாதித்து வா தமிழ்ப்பெண்ணே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com