

கிறிஸ்ட்சர்ச்: கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்தது.
டாசில் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 200 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 67 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து இருந்தது.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 78.4 ஓவர்களில் 171 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சோகைல்கான் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். நியூசிலாந்தின் வாக்னர், போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர். எனவே நியூசிலாந்துக்கு அணிக்கு 105 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
105 ரன் எடுத்ததால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆட்டத்தைத் துவக்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் லாதம் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராவல்- வில்லியம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழித்துச் சென்றது.
முடிவில் நியூசிலாந்து அணி 31.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0. என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வில்லியம்சன் 66 ரன்னும், ராவல் 36 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 25-ந்தேதி அன்று ஹாமில்டனில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.