புதுதில்லி: பிசிசிஐக்கு வர வேண்டிய பணவரவு இல்லா விட்டால் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியாது என்று பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 30-ஆம் தேதி நடந்த பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட நிதி தொடர்பான முடிவுகளின் படி, அதன் உறுப்பு அமைப்புகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதை நிறுத்தி வைக்குமாறு பிசிசிஐ கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு லோதா கமிட்டி கடிதம் எழுதியுள்ளது.
இதன் காரணமாக எழுந்துள்ள சூழ்நிலை குறித்து பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாக்கூர் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிசிசிஐயின் உறுப்பு அமைப்புகள் அனைத்தும் தத்தமது மாநிலங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐஐ அளிக்கும் நிதியை சார்ந்துள்ளன. அனால் அவர்களுக்கு இன்று பணத்தை பரிமாற்றம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.
நியூசிலாந்து தொடரின் நிலை என்ன ஆகும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால் நமது அணி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிலையில் இத்தகைய விஷயம் மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.
பணம் இல்லாமல் நாம் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இயலாது.. பிசிசிஐ மத்திய அரசிடம் இருந்தோ, அல்லது எந்த மாநில அரசிடம் இருந்தோ நிதிபெறுவதில்லை.
இவ்வாறு தாக்கூர் தெரிவித்தார்.