இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், 2-ஆவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளெர் செய்தது. இதன்பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தது.
இதனால் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக டிக்வெல்லா 51 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 439 ரன்கள் பின்தங்கி ஃபாலோ ஆன் பெற்ற நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை இலங்கை தொடர்ந்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.
துவக்க வீரர் திமுத் கருணாரத்னே 141 ரன்களும், குஷால் மெண்டீஸ் 110 ரன்களும் எடுத்தனர். இருப்பினும் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.