உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 5-வது முறையாக போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வென்றுள்ளார். இதையடுத்து, அதிகமுறை சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை வென்ற மெஸ்ஸியின் சாதனையைச் சமன் செய்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை தொடர்ந்து 2-வது முறையாக வென்றுள்ளார் ரொனால்டோ. மெஸ்ஸிக்கு 2-ம் இடமும் நெய்மருக்கு 3-ம் இடமும் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு இந்த விருதை 2008, 2013, 2014, 2016 ஆகிய வருடங்களில் ரொனால்டோ வென்றுள்ளார்.
சமீபத்தில், ஃபிஃபா அமைப்பின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதையும் 5-வது முறையாகப் பெற்றார் ரொனால்டோ.
கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான 32 வயதான ரொனால்டோ, ரியல் மாட்ரிட் வீரர் அணியில் விளையாடி வருபவர். சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 100 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையைச் சமீபத்தில் படைத்தார்.
ரஷ்யாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் கேப்டனாக ரொனால்டோ பணியாற்றவுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல். அந்த அணி தனது இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்தது.