

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 8 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. சாஹல் 6 விக்கெட்டுகளும், பூம்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 14-ஆவது ஓவரை வீசிய சாஹல், அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்த ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இறுதியில் இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களில் 127 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 25 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் அவர் தட்டிச் சென்றார்.
சாஹல் மீது அதிக வெளிச்சம் உண்டாகியிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய இன்னொரு முக்கியமான தகவலும் வெளிவந்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த சாஹல், இந்தியாவின் முன்னாள் U 12 (12 வயதுக்குட்பட்ட) செஸ் சாம்பியனாக இருந்துள்ளார். கோழிக்கோட்டில் நடைபெற்ற ஆசிய இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா சார்பாக விளையாடியுள்ளார். இதையடுத்து கிரீஸ்ல் நடைபெற்ற உலக இளைஞர் செஸ் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். ஆனால் செஸ் விளையாட்டில் ஈடுபடத் தேவையான நிதி வசதி கிடைக்காததால் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு கிரிக்கெட்டில் முழுக்கவனம் செலுத்தினார் சாஹல்.
செஸ் வீரராக இருப்பதால் என்னால் பல திட்டங்களை வகுக்க முடிகிறது. பேட்ஸ்மேனை விடவும் ஒருபடி முன்னே சென்று திட்டமிடமுடிகிறது. என் பந்துவீச்சை பேட்ஸ்மேன் நொறுக்கித்தள்ளும்போது நான் அமைதியாகவே இருப்பேன். செஸ் கற்றுக்கொடுத்த முக்கியமான ஆட்ட உத்தியாகும் அது என்கிறார் சாஹல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.