டெஸ்ட்: ஆஸி. மீண்டும் அபார பந்துவீச்சு! கடும் நெருக்கடியில் இந்தியா!

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 150 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றுள்ளது.
டெஸ்ட்: ஆஸி. மீண்டும் அபார பந்துவீச்சு! கடும் நெருக்கடியில் இந்தியா!
Updated on
1 min read

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் அபாரமாகப் பந்துவீசி இந்திய அணிக்கு நெருக்கடி தந்துவருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 150 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றுள்ளது.  

பெங்களூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 71.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டது.  ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 126 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. புஜாரா 173 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 79, அஜிங்க்ய ரஹானே 105 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது, நேற்று போலவே புஜாராவும் ரஹானேவும் கவனமாக விளையாடினார்கள். கருண் நாயரின் முச்சதத்தால் அதிக அழுத்ததுக்கு ஆளாகியிருக்கும் ரஹானே, இந்த டெஸ்ட் போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். அவர் 128 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக நடுவர் நாட் அவுட் கொடுத்தும் டிஆர்எஸ் முறையில் 52 ரன்களுடன் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்தப் பந்திலேயே கருண் நாயர் கிளீன் போல்ட் ஆகி ரன் எதுவும் எடுக்காமல் சோகத்துடன் வெளியேறினார். அடுத்தப் பந்தில் அவுட் ஆகாமல் ஸ்டார்க்கின் ஹாட்ரிக் முயற்சியைத் தடுத்தார் சாஹா.

அடுத்த ஓவரில் இந்திய ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக ஹேஸிவுட் பந்துவீச்சில் 92 ரன்களில் மார்ஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் புஜாரா. புஜாரா - ரஹானே ஆகிய இருவரும் இன்றும் ஆஸி அணிக்கு நெருக்கடி தருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் அடுத்தடுத்து இருவரும் வெளியேறியது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதுபோல இருந்தது. அடுத்ததாக வந்த அஸ்வின் 4 ரன்களில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். காலைப் பகுதியில் 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா.

இந்திய அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இன்னும் 2 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 151 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸிவுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com