இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதையடுத்து செப்டம்பர் 19 முதல் 29 வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதன் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பினார். கடைசியாக மார்ச் 2015-ல் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியில் கெயில் விளையாடினார்.
அதுபோல மற்றொரு அதிரடி அணுபவ நடுவரிசை பேட்ஸ்மேன் மார்லன் சாமுவேல்ஸும் மே.இ.தீவுகள் அணியில் இடம்பிடித்தார். இவர் அக்டோபர் 2016-ல் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியில் கடைசியாக விளையாடினார்.
டெஸ்ட் போட்டிகளில் மே.இ.தீவுகளின் ஆட்டம் முன்பு போல் இல்லை என்றாலும் ஒருநாள் மற்றும் டி20 வகை கிரிக்கெட் போட்டிகளில் எதிரணிக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய வகையில் தான் உள்ளது. மேலும், இவர்கள் இருவரும் அணிக்குத் திரும்பி இருப்பது கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இருப்பினும், முன்னணி ஆல்ரவுண்டர் டுவையன் பிராவோ, காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் இந்தத் தொடரில் இடம்பெறவில்லை.
முன்னதாக, செப்டம்பர் 13 நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணியுடன் ஒரே போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்று விளையாடுகிறது. பின்னர் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் மோதவுள்ளது.
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியின் விவரம் பின்வருமாறு:
சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, மிகுல் கம்மின்ஸ், கிறிஸ் கெயில், ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசப், இவன் லீவிஸ், ஜேஸன் முகமது, ஆஷ்லே நர்ஸ், ரோவ்மன் பவல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.