மகளிர் கிரிக்கெட்: 113 ரன்களுக்குச் சுருண்டது இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
நாகபுரியில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் 2-வது ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
எனினும் இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சால் 9-வது ஓவர் முதல் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. மந்தனா அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். 3 வீராங்கனைகள் தவிர இதர வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது.
கடைசியில், 37.2 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனீல் ஹஸல், சோபி எக்லஸ்டோன் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.