/

டெஸ்ட்: 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்களை எட்டிய இந்திய அணி!

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்துள்ளது... 

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:38 pm

எழில்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் டெஸ்ட் வியாழக்கிழமை ரோஸ்பெளல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் கரன் மீண்டும் சேர்க்கப்பட்டார். மொயின் அலி சேர்க்கப்பட்டிருந்தார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களையே எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. தவன் 3, லோகேஷ் ராகுல் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். 

இன்று ஆட்டம் தொடங்கியவுடன் ராகுலின் விக்கெட்டை வீழ்த்தியது இங்கிலாந்து. 19 ரன்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ராகுல். 53 பந்துகள் தாக்குப்பிடித்து 23 ரன்கள் எடுத்த தவன், பிராட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 50 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததால் பதற்றமானார்கள் இந்திய ரசிகர்கள்.

ஆனால் பிறகு ஜோடி சேர்ந்த புஜாராவும் கோலியும் பொறுப்புடன் விளையாடி மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக்கொண்டார்கள். இன்று 6 ரன்களைக் கடந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களை எட்டினார் விராட் கோலி. 

2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை எடுத்துள்ளது. புஜாரா 28 ரன்களுடனும் கோலி 25 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 146 ரன்கள் பின்தங்கிய நிலையில் 8 விக்கெட்டுகள் மீதமுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.