இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.
இதற்கான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை நேரடியாக அறிவித்துள்ளது இந்திய அணி. இந்திய அணியிலிருந்து விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப்-புக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்திய அணியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:
தொடக்க வீரர்கள் சமீபகாலமாகச் சரியாக விளையாடவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. சரியான கூட்டணியைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பார்தீவ் படேலால் என்ன முடியாது, விஹாரியால் என்ன முடியும் எனப் பார்க்கிறோம். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் முடிவெடுத்தோம். ஆனால் இது நீண்ட நாளைக்கான திட்டமல்ல. அணியின் தேவைக்காக இதற்கு முன்பு புஜாரா கூட தொடக்க வீரராகக் களமிறங்கியுள்ளார் என்று விளக்கமளித்துள்ளார். இதையடுத்து மயங்க் அகர்வாலும் விஹாரியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3-வது டெஸ்டுக்கான இந்திய அணி:
விராட் கோலி (கேப்டன்), விஹாரி, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜடேஜா, பூம்ரா, ஷமி, இஷாந்த் சர்மா.