

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவன் (36) கூறினார்.
கடந்த 1998 முதல் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் தவிர்க்க முடியாத போட்டியாளரான ஷிவாவுக்கு, இது 6-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். லூக் போட்டியில் நடப்பு ஆசிய சாம்பியனான அவர், 2011, 2012, 2016, 2017 போட்டிகளிலும் சாம்பியன் ஆகியுள்ளார். ஹிமாசல பிரதேசம் மனாலியைச் சேர்ந்த ஷிவா, ஆசிய லூக் போட்டியின் நடப்பு சாதனையாளர் ஆவார்.
2006 குளிர்கால ஒலிம்பிக்கில் 25-ஆவதாக வந்ததே இவரது அதிகபட்சமாகும். முதல் முறையாக எதிர்வரும் ஒலிம்பிக்கிற்கு தனக்கென பிரத்யேக பயிற்சியாளருடன் பங்கேற்கிறார் ஷிவா. அத்துடன், அரசு தரப்பில் இருந்தும் அவருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷிவா கூறியதாவது: இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் போட்டியிட்டுள்ளேன். தற்போது வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். எனவே, பியோங்சாங் ஒலிம்பிக் எனது கடைசி சர்வதேச போட்டியாகும். அதில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது விபத்தில் சிக்கினேன். இன்னும் அதிலிருந்து முழுவதுமாக மீளவில்லை. எனது போட்டி நடைபெறும் 10, 11 தேதிகளுக்குள்ளாக 100 சதவீதம் மீண்டிடுவேன் என நம்புகிறேன்.
ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளின்போது இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் கெளரவம் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அது ஓர் அற்புதமான உணர்வு. கோடைகால ஒலிம்பிக்கைப் போன்றே, குளிர்கால ஒலிம்பிக்கிலும் அதிக இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஷிவா கேசவன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.