கராச்சி: சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றின் முடிவில், இந்தியக் கொடியுடன் நின்ற ரசிகருக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது ஏன் என்று சாகித் அஃப்ரிடி அசத்தலான விளக்கம் அளித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் செயின்ட் மோர்டிஸ் பகுதியில் முதன்முறையாக ஐஸ் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் விரேந்திர சேவாக் தலைமையிலான அணியும், ஷாகித் அஃப்ரிடி தலைமையிலான அணியும் மோதின. இறுதியில் அஃப்ரிடி அணி வெற்றிபெற்றது.
இருப்பினும் இந்த போட்டியின் பிறகு நடைபெற்ற காரியம் இந்தியர்களிடையே அவருக்கு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி வருகிறது. போட்டியின் முடிவில் அங்கிருந்த இந்திய ரசிகை ஒருவர் அஃப்ரிடி உடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினார். அப்பொழுது அவர் தான் கையில் வைத்திருந்த தேசியக் கொடியை மடித்து வைத்திருந்தார்.
இதை கவனித்த அஃப்ரிடி அவரிடம் இந்திய தேசியக் கொடியை நன்றாக விரித்துப் பிடிக்குமாறு கூறி, அதன் பின்னர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனைக் கவனித்த அனைவரும் நெகிழ்ந்தார்.
இந்நிலையில் இந்தியக் கொடியுடன் நின்ற ரசிகருக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது ஏன் என்று கராச்சியில் செய்தியாளர் ஒருவர் அஃப்ரிடியிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர், "நாம் எல்லா நாட்டு தேசியக் கொடிகளையும் மதிக்க வேண்டும். எனவேதான் கொடியை சரியாக விரித்துப் பிடிக்குமாறு நான் அந்த ரசிகையிடம் கூறினேன். அத்துடன் அவருக்கு புகைப்படம் நன்றாக வரவேண்டும் என்றும் நான் விரும்பினேன்" என்று பதிலளித்துள்ளார்.