ஒரு சீசனில் 2141 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார் கர்நாடக வீரர் மயங்க் அகர்வால். எனினும் அவர் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 தொடருக்குத் தேர்வாகவில்லை. இதுகுறித்து பல்வேறு விமரிசனங்கள் எழுந்துள்ளன. இதற்கு தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:
தான் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதில் எந்த வீரரும் குழப்பிக்கொள்ளக் கூடாது. அணிக்குத் தேர்வாகாத வீரர்களிடம் தேர்வுக்குழு உறுப்பினர்கள் பேசி நிலைமையை எடுத்துச் சொல்கிறார்கள். அதன் அடிப்படையில் நான் மயங்க் அகர்வாலிடம் பேசினேன். இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டிய வீரர்களின் பட்டியலில் நிச்சயம் அவர் உள்ளார் என்பதை எடுத்துரைத்தேன். வரிசையில் அவர் உள்ளதையும் கூறினேன்.
தேர்வு நடைமுறையில் சில அம்சங்களைப் பின்பற்றி வருகிறோம். இந்திய அணிக்குத் தேர்வாக வேண்டியவர்கள் அனைவரும் வரிசையில் உள்ளார்கள். இதில் யாரும் வரிசையைத் தாண்டி முன்னே வந்துவிடக்கூடாது என நம்புகிறோம். மயங்க் அருமையான வீரர். நான் சொன்னதை நன்குப் புரிந்துகொண்டார். நீங்கள் சரியாகச் சொன்னீர்கள். நான் அவசரப்படவில்லை என்று என்னிடம் கூறினார் என்று அவர் பேட்டியளித்துள்ளார்.