தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஷமி எங்குப் பயணம் செய்தார்?: பிசிசிஐயிடம் காவல்துறை கேள்வி!
பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது...


பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், கொல்கத்தா காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஷமி மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா நகர காவல் துறை இணை ஆணையர் பிரவீண் திரிபாதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் அளித்த புகாரின் பேரில், ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 பேர் மீதும், கொலை முயற்சி, குடும்ப வன்முறை, வன்புணர்ச்சி ஆகிய பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த 5 பேர் மீதும் பிணையில் வெளிவர இயலும் இரண்டு பிரிவுகளின்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர். எனினும், தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முகமது ஷமி தனது முகநூல் மற்றும் சுட்டுரைப் பக்கங்களில் மறுப்பு தெரிவித்து வருகிறார். தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, முகமது ஷமிக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று ஹாசின் ஜஹான் சில தினங்களுக்கு முன் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, தன்னிடம் ஷமியின் அண்ணன் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். ஷமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக அடுக்கடுக்கான புகார்கள் குவிவதால், போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஹாசின் ஜஹான் ஒரு பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தான் பெண்ணான அலிஸ்பா என்பவரிடமிருந்து துபாயில் பணம் பெற்றுக்கொண்டார். இங்கிலாந்தைச் சேர்ந்த முகமது பாய் என்பவர் சொன்னதன் பேரில் அந்தப் பணத்தை வாங்கினார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. பிசிசிஐயிடமிருந்து சம்பளம் பெறும் ஷமி எதற்காக முகமது பாயிடமிருந்து பணம் பெறவேண்டும்? தென் ஆப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு என்னைக் கழற்றிவிடவேண்டும் என்று எண்ணினார். அதனால் சொத்து மற்றும் இதர ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்றார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஷமி பயணம் செய்த விவரங்கள் குறித்து பிசிசிஐயிடம் தகவல் கோரியுள்ளது கொல்கத்தா காவல்துறை. தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் முடிந்தபிறகு ஷமி அணியுடன் பயணம் செய்தாரா என்கிற தகவலையும் அவர் பயணத் திட்டங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...