2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி தரப்பில் பாட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 15 விதமான விளையாட்டுகளைச் சேர்ந்த 222 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில், காமன்வெல்த் போட்டிகளின் துவக்கத்தை குறிக்கும் விதமாக ஒவ்வொரு அணியும் பங்கேற்கும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில் அந்த நாட்டைச் சேர்ந்த பிரபலமான வீரர் அல்லது வீராங்கனை தங்கள் நாட்டு அணியை அவர்களின் தேசியக் கொடியை ஏந்தியவாறு வழிநடத்திச் செல்வது வழக்கம்.
அவ்வகையில், காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழாவில் இந்திய அணி தரப்பில் முன்னணி நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இம்முறை தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியின் அணிவகுப்புக்கு தலைமை ஏற்கிறார்.
முன்னதாக, 2014-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதுபோல கடந்த வருடம் நடைபெற்ற பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.