தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய மூவரும் உடனடியாகத் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தாயகம் திரும்பவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் அறிவித்தார்.
மேலும், இவர்களுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு வருடம் தடை விதித்துள்ளது. அதுபோல ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டார்.
இதனால், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் யார் எனும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.