மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது. இப்போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்டில் முதல் முறையாக தடம் பதித்த இந்திய இளம் வீரர் பிருத்வி ஷா, சதம் விளாசி அசத்தினார். 134 ரன்கள் குவித்த பிருத்வி, முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முதல் நாள் முடிவில் கோலி 72, பந்த் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் எப்படியும் 550 ரன்கள் எடுக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இன்றைய ஆட்டம் தொடங்கியது. நேற்று புஜாரா - பிருத்வி ஷா ஜோடி மே.இ. அணி பந்துவீச்சாளர்களை வெறுப்பேறியதுபோல கோலி - பந்த் ஜோடியும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தியது. பந்துகளை வீணடிக்காமல் ரன்களைக் குவித்து வந்த பந்த், சிக்ஸர் அடித்து 57 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். தொடர்ந்து மூன்று ஓவர்களில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து வந்திருந்த சிறு ரசிகர் கூட்டத்தை உற்சாகமூட்டினார். ரன் அடிப்பதே தெரியாதது போல கவனமாக ரன்கள் சேர்த்த கோலி, 184 பந்துகளில் சதமடித்தார். இது அவருடைய 24-வது டெஸ்ட் சதமாகும். கேப்டனாக இது அவருடைய 17-வது சதம்.
கோலியைப் போல ரிஷப் பந்தும் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவசரப்பட்டு 92 ரன்களில் தன்னுடைய விக்கெட்டைப் பறிகொடுத்தார். பந்த் 84 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 92 ரன்களில் பிஷு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜடேஜா, கவனமாக விளையாடி கோலிக்கு நல்ல இணையாக விளங்கினார்.
2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 118 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 120, ஜடேஜா 19 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.