இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் வெற்றி, தோல்வியின்றி டையில் முடிந்தது. முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்களைக் குவித்தது. கேப்டன் விராட் கோலி 157 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் 37-வது சதமடித்தார். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 321/7 ரன்களை எடுத்தது. அதன் வீரர்கள் ஷேய் ஹோப் 123, ஷிம்ரன் 94 ரன்களை விளாசினர்.
இந்த ஆட்டத்தின்போது, துரிதமாக 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையையும் நிகழ்த்தினார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கரை விடவும் 54 இன்னிங்ஸ் குறைவாக விளையாடி இந்த இலக்கை அவர் எட்டியுள்ளார்.
இதையடுத்து சச்சினை விடவும் கோலி சிறந்த வீரரா என்கிற கருத்து மோதல்கள் சமூகவலைத்தளங்களில் நிகழ்ந்து வருகின்றன. இதுகுறித்து புகழ்பெற்ற கிரிக்கெட் விமரிசகர் ஹர்ஷா போக்ளே கூறியுள்ளதாவது:
ஒருநாள் கிரிக்கெட்டில் வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த வீரர்களின் ஆட்டத்திறனை நாம் ஒப்பீடு செய்யக்கூடாது. ஏனெனில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 6-8 வருட இடைவெளியில் விதிமுறைகளும் மாறுகின்றன. முன்பு பார்த்ததை ரசித்தது போல இப்போது பார்த்துக்கொண்டிருப்பதையும் ரசியுங்கள் என்று கூறியுள்ளார்.