சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவன், தில்லி டேர்டெவில்ஸ் அணிக்குத் திரும்புகிறார். ஐபிஎல் போட்டியில் 11 வருடங்களுக்கு முன்பு தில்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்ற ஷிகர் தவன் மீண்டும் அதே அணியில் இடம்பெறவுள்ளார்.
ஷிகர் தவனை தில்லி அணிக்குப் பரிமாற்றம் செய்துள்ள ஹைதராபாத் அணி அதற்குப் பதிலாக விஜய் சங்கர், அபிஷேக் வர்மா, ஷபாஸ் நதீம் ஆகிய மூன்று வீரர்களைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 5.20 கோடிக்கு தவனைத் தேர்வு செய்தது ஹைதராபாத் அணி. தான் குறைவான விலைக்குத் தேர்வானதாக ஷிகர் தவன் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து இந்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த வருட ஏலத்தில் விஜய் சங்கரை ரூ. 3.20 கோடிக்கும் நதீமை ரூ. 3.20 கோடிக்கும் அபிஷேக்கை ரூ. 55 லட்சத்துக்கும் தேர்வு செய்ததுள்ளது தில்லி அணி.
2008-ம் வருடம் தில்லி அணிக்கு விளையாடிய ஷிகர் தவன் அதன்பிறகு இரு வருடங்கள் மும்பைக்காக விளையாடினார். அதன்பிறகு தொடர்ந்து ஹைதராபாத் அணியில் இடம்பெற்று வருகிறார். 2013-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கியதற்கு முன்பாக டெக்கன் சார்ஜர்ஸ் அணியில் இடம்பெற்றார்.
சன்ரைசர்ஸ் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரராக உள்ளார் தவன். 91 ஆட்டங்களில் 2768 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 125.13. இந்த வருட ஐபிஎல்-லில் 497 ரன்கள் எடுத்துள்ளார். ஹைதராபாத் அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றார்.
வீரர்களின் பரிமாற்றம் குறித்து தில்லி, ஹைதராபாத் ஆகிய இரு அணிகளிலிருந்தும் அதிகாரபூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.