அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 9-ஆவது முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் மகளிர் காலிறுதி சுற்று காலிறுதி சுற்று இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் மோதினர்.
முதல் செட்டின் தொடக்கத்தில் செரீனா வில்லியம்ஸ் முதலில் சற்று தடுமாற்றம் கண்டார். அதன்மூலம், முதல் செட்டில் பிளிஸ்கோவா 4-2 என முன்னிலை வகித்தார். ஆனால், அதன்பிறகு எழுச்சி கண்ட செரீனா தொடர்ச்சியாக 4 ஆட்டங்களை வென்று முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார்.
அதன்பிறகும், தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த செரீனா வில்லியம்ஸ் 2-ஆவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். இதன்மூலம், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து 9-ஆவது முறையாக அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்.
செரீனா வில்லியம்ஸ் தனது அரையிறுதி சுற்றில் லாத்வியா நாட்டு வீராங்கனை அனாஸ்தாஸ்திஜா செவாஸ்தோவாவை எதிர்கொள்கிறார்.