இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவெடுக்கட்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பால்s நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 44 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதையடுத்து ஆகஸ்டு மாதம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியையும் ரத்து செய்ய வேண்டும் என பலதரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் அரசு அனுமதிக்கும் வரை இருநாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறாது என ஐபிஎல் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியதாவது:
தற்போது நிலவும் சூழலில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நம்மைப் போன்ற மக்கள் முடிவெடுக்கக் கூடாது. இது மத்திய அரசால் முடிவெடுக்கப்பட வேண்டியது. அதனால் நமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்காமல் இருப்பது நல்லது. எனவே இம்முடிவை எடுக்க அரசு மற்றும் அதுதொடர்பானவர்கள் மட்டுமே ஆவர்.
இதில், அவர்கள் நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே அதன்படி நான் செயல்படுவோம் என்றார்.