பாண்டியா, ராகுல் விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதை ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ பதிவிட்டுள்ளது. அதன்படி, ராகுல் டிராவிட் பேசியதாவது,
"ராகுல், பாண்டியா இருவரும் தங்களது திறனை இதுவரை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. இந்த சம்பவம், அவர்களது செயல்பாட்டில் வெளிப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறனின் உச்சத்தை தொட்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதனை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு ஊக்கமாக அமையலாம்.
இருவருக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நான் பயிற்சி அளித்துள்ளேன். இந்த நேர்காணல், அவர்களை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது என்று எனக்கு தோன்றவில்லை. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்கள், நிச்சயம் இதிலிருந்து வலிமையாக மீண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் அப்படி வலிமையாக மீண்டு வந்தால், நிச்சயம் முன்மாதிரிகளாக விளங்குவார்கள்.
நான் அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்க்கவில்லை. அதில் ஒரு சில பகுதிகளை மட்டுமே நான் பார்த்தேன். ஒரு கட்டத்தில், அவர்களே இதுகுறித்து வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்காக விளையாடும் போது, பொதுப்பார்வை மற்றும் அதன் மீதான கருத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். காரணம், அது பல பேருக்கு முற்றிலும் பொருத்தமற்ற வகையில் அமையும். அதேசமயம், இதுபோன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறும் என்பதையும் நாம் உணரவேண்டும்.
விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தவறு செய்வார்கள். அதிலிருந்து பாடம் கற்று, கட்டமைத்து கொள்வதன் ஒரு அங்கம் தான் அது" என்றார்.