

உலக கிரிக்கெட்டை விராட் கோலி மற்றும் இதர என்று இரண்டு வகையாக பிரித்துவிடலாம் என்று மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் வீரர் பிரையன் லாரா தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
விளையாட்டைப் பொருத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும், ஒவ்வொரு அணிக்கும் ஏற்படும் நிலை தான் மேற்கிந்திய தீவுகளுக்கும் ஏற்பட்டது. ஆனால், மே.இ.தீவுகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த சரிவு மிக நீளமானது. இது முற்றிலும் எதிர்பாராதது. இந்த சுழற்சியில் இருந்து விரைவில் மேலெழும்பும் என நான் நம்புகிறேன்.
தற்போதைய கிரிக்கெட்டை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று விராட் கோலி மற்றொன்று இதர. ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ என பல திறமையான வீரர்கள் இருக்கலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒரு சிறப்பான வீரர் யாரும் கிடையாது. அவர் ரன் குவிக்கும் இயந்திரமாக உள்ளார்.
அனைத்து வகை கிரிக்கெட்டிலும், ஆடுகளங்களிலும் சிறப்பாக செயல்படுகிறார். எதிரணியாக யார் இருந்தாலும் அவர்களை வென்று சாதிக்கிறார். ஆனால், கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதுமே சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார்.
ஏனென்றால் இன்றைக்கு இந்திய அணி கிரிக்கெட்டில் இத்தனை உச்சங்களை எட்டுவதற்கு சச்சின் தான் முக்கிய காரணம். ஏனென்றால் கிரிக்கெட்டில் அவர் செய்த சாதனை அளப்பரியது. ஒரு காலத்தில் சொந்த ஆடுகளங்களில் மட்டும் தான் இந்திய அணியால் சாதிக்க முடியும் என்ற கோட்பாட்டை மாற்றியமைத்தவர்.
சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்திய அந்த வழித்தடத்தில் தற்போதைய இளம் வீரர்கள் எளிதாகப் பயணிக்கின்றனர் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.