கிரிக்கெட் போட்டிகளின் போது மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் அப்போதைய போக்கு மாற்றியமைக்கப்படுவது விதி. இதனடிப்படையில் பல அணிகளுக்கு அது சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்துவிடுகிறது.
இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை மீது கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல வீரர்களுக்கு அதிருப்தி உண்டு. இதை அவ்வப்போது அவர்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகளும் ஏராளம்.
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஆட்டம் மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே குறிப்பிட்ட நேரம் கிடைத்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி போட்டி மாற்றியமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனக்கே உரிய பாணியில் டக்வொர்த் லீவிஸ் முறையை ட்விட்டரில் விளாசினார்.
அதில், ஒருவேளை மழை பெய்தால்! ஊழியர்களுக்கு அதற்கொற்ற மாதிரி ஊதியம் வழங்கப்படுமா? அது அவர்களுக்கு சாதகமாக இருக்குமா? இதுகுறித்து ஒவ்வொரு நிறுவனங்களிலும் உள்ள மனிதவள மேம்பாட்டுப்பிரிவு அதிகாரிகள் கருத்து என்ன? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் பதிவிட்டு விமர்சித்தார்.