உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன் என முதலில் அறிவித்தார் கிறிஸ் கெயில். அதன்பிறகு, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்றார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பு தந்துள்ளது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள மே.இ. தீவுகள் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய சுனில் அம்ப்ரிஸ், டேரன் பிராவோ, ஆஷ்லி நர்ஸ், ஷன்னான் கேப்ரியல் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல பிரபல வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் டி20 அணியில் இடம்பிடித்துள்ளார். ஜான் கேம்பல், ராஸ்டன் சேஸ், கீமோ பால் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த மேற்கிந்தியத் தீவுகள் வீரரான பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க கெயிலுக்கு இன்னும் 12 ரன்களே தேவை. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இச்சாதனையை கெயில் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 8 முதல் ஒருநாள் தொடர் தொடங்குகிறது.