பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் உலகக் கோப்பை போட்டிகளில் 7-0 என இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதுவரையிலான போட்டிகளின் அடிப்படையில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலிலும் 9-ஆவது இடத்தில் உள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உட்பட பலர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சாடி வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் இன்ஸமாம்-உல்-ஹக் உட்பட அணி நிர்வாகிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன்காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த மனு மீது நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.