பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவமில்லா இலங்கை அணி, நெ.1 டி20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஏற்கெனவே தொடரை வென்ற இலங்கை அணி, கடைசி டி20 ஆட்டத்தில் 5 வீரர்களை மாற்றியது. இருப்பினும் அதனுடைய வெற்றியை பாகிஸ்தான் அணியால் தடுக்கமுடியவில்லை.
லாகூரில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அறிமுக வீரர் ஒஷாடா ஃபெர்னாண்டோ, 48 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலக்கை விரட்டும்போது, பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியதுதான் பெரிய சிக்கலாக அமைந்தது. முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சேர்ந்து 72 பந்துகளில் 76 ரன்கள் மட்டும் எடுத்தார்கள். இதனால் பின்னால் வந்த வீரர்களுக்குக் கடும் அழுத்தம் ஏற்பட்டது. முதல் 15 ஓவர்கள் வரை பாகிஸ்தான் அணியால் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. இதனால் கடைசி 30 ரன்களில் 54 ரன்கள் தேவைப்பட்டதால் வெற்றியை இழந்தது. ஹாரிஸ் சோஹைல் 50 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. இலங்கை அணித் தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன.