புது தில்லி: நான் பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட போது விராட் கோலிதான் உதவினார் என்று நடைபெற்று வரும் யு.எஸ் ஓபனில் ரோஜர் பெடரருடன் மோதிய இளம் இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தெரிவித்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பந்தயங்களில் ஒன்றானயுஎஸ் ஓபன் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்று ஆட்டத்தில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரரை இந்திய இளம் வீரர் சுமித் நாகல் எதிர்கொண்டார்
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்றார் நாகல். இதனால் அதிர்ச்சி அடைந்த பெடரர் பின்னர் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, 6-1, 6-2, 6-4 என நாகலை வீழ்த்தினார். 22 வயதான நாகல் முதல் செட்டில் பெடரரை திறமையாக எதிர்கொண்டு ஆடினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நான் பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட போது விராட் கோலிதான் உதவினார் என்று சுமித் நாகல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியினை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் விளையாட்டு மையமானது 2017-ஆம் ஆண்டில் இருந்து எனக்கு ஆதரவளித்து வருகிறது.கடந்த இரு வருடங்களாக நான் சரியாக விளையாடாத காரணத்தால் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தேன். ஒருவேளை விராட் கோலியின் விளையாட்டு மையம் எனக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என்று தெரியவில்லை.
இந்த வருடத் துவக்கத்தில் போட்டி ஒன்றில் பங்கேகேற்று விட்டு நான் கனடாவில் இருந்து ஜெர்மனிக்கு திரும்பும் போது, என் கையில் ஆறு டாலர்கள் மட்டுமே இருந்தது. நான் என்ன விதமான பொருளாதாரச் சூழலில் அதற்கு முன்னர் இருந்திருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் நான் தப்பி விட்டேன். நிலைமையும் பின்னர் சீரானது.
வீரகளுக்கு உதவுவதன் மூலமாக நீங்கள் நாட்டில் அந்த விளையாட்டு செழித்திருக்கக் உதவுகிறீர்கள். அதிர்ஷ்டவசமாக கோலியிடம் இருந்து நான் அத்தகைய உதவி கிடைக்கப் பெற்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.