2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் 'ஹிட்மேன்' ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் விளாசினார். 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களுடன் 104 ரன்களைக் குவித்தார்.
போட்டியின் போது ரோஹித் ஷர்மா பறக்கவிட்ட ஒரு சிக்ஸர் மைதானத்தில் இருந்த தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகையான மீனா என்பவர் மீது விழுந்தது. இந்நிலையில், போட்டி முடந்த பின்னர் அந்த ரசிகையை சந்தித்து நலம் விசாரித்த ரோஹித் ஷர்மா, அவருக்கு ஆட்டோகிராஃப் உடன் கூடிய தொப்பியை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
முன்னதாக, உலக கிரிக்கெட் கொண்டாடிய 87 வயது மூத்த ரசிகையான சாருலதா படேலை போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது.